திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎஃப்டி) நிர்வாகம் கேரள காவல் துறைக்கு ‘டிரிக்கா’ (திருச்சி கார்பைன்) என்ற பெயரிலான துப்பாக்கிகளை (சப்-மெஷின்கன்) தயாரித்து அதன் முதல்தொகுப்பை வழங்கி உள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அட்வான்ஸ்டு வெபன்ஸ் மற்றும் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட்டின் ஒரு பிரிவான திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் நிர்வாக இயக்குநர் சஞ்சய்ஸ்ரீவஸ்தவா, பொது மேலாளர்கள் வி.குணசேகரன், எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோர் 92 ‘டிரிக்கா’ துப்பாக்கிகளை கேரள காவல் துறையிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.
‘டிரிக்கா’ துப்பாக்கி உள்நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட வெற்றிகரமான சோதனைகளின் அடிப்படையில், 92 ‘டிரிக்கா’ துப்பாக்கிகளுக்கான ஆணையை கேரள காவல் துறை வழங்கியது.
டிரிக்கா என்பது ஒரு வழக்கமான சப்-மெஷின்கன் அளவைக் கொண்டுள்ளது. இது 7.62*39 மி.மீ. காலிபர், 3.50 கிலோ எடையுடன், 175 மீட்டர் வரை சுடும் திறன் கொண்டது.
இது, காலாட்படை போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பராட்ரூப்பர்கள், காவல் துறையினர், விமான நிலையங்கள், சிறப்பு நடவடிக்கைப் படைகள் போன்ற உயர் பாதுகாப்பு வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட விரைவான தாக்குதலுக்கான சிறிய இலகுரக, தானியங்கி ஆயுதமாகும்.
தற்போது அசாம் வனத் துறை, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடமிருந்து ‘டிரிக்கா’ துப்பாக்கிக்கான பணி ஆணையை திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை பெற்றுள்ளது