புதுச்சேரியில் மதுக்கடைகள் அடைப்பு முதல் வானிலை முன்னறிவிப்பு வரை: டாப் 5 விரைவுச் செய்திகள்


மே 13, 14-ல் கனமழை வாய்ப்பு: வரும் 13, 14-ம் தேதிகளில் நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்து விற்பனைக்கு தடை: மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரவசத்துக்கு 70 என தேசிய அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 39 ஆக குறைந்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து, தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாநில திட்டக் குழு தகவல்: தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல் அடைவு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் சிறப்பம்சம் அதிகளவிலான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டதாகும். அதிலும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது.

5,650 ஹஜ் பயணிகளுக்கு தலா ரூ.25,000 மானியம்: முதல்முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் 5,650 பேருக்கு மானிய தொகை வழங்கும் அடையாளமாக, 10 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க, முதல்முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த பயணிகளுக்கு மானிய தொகை இந்த ஆண்டு முதல் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த 2024-25-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசால் இந்த ஆண்டு ரூ.14.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தலா ரூ.25 ஆயிரம் வீதம் 5,650 ஹஜ் பயணிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, ஹஜ் மானிய தொகையாக 10 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நாசர், தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் மூட உத்தரவு: சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு நாளை (மே 11) மாமல்லபுரம் அருகே நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி வழியாக வருவோர் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள சாராயம், கள் உட்பட அனைத்து மது விற்பனைக் கூடங்களையும் நாளை (மே 11) மதியம் 1 மணி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

x