சென்னை: தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க வழங்கப்பட்ட அனுமதியை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொழிலாளர் நலத் துறையின் செயலர் கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மே 5-ம் தேதி அன்று 42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், “பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, ஜுன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் அதை மேலும், 3 ஆண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்” என முதல்வர் அறிவித்தார்.
முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, ஜூன் 5-ம் தேதி முதல் மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்து, தொழிலாளர் நலத்துறையால் மே 8-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.