போர் பதற்றம் நிலவுவதால் குடியரசு தலைவரின் சபரிமலை வருகை தள்ளிவைப்பு


தேனி: இந்திய எல்லையில் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் சபரிமலை தரிசன நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு, 19-ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன், வழிபாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் வரும் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. நிலக்கல் முதல் சபரிமலை வரை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான் மீதான போர் நடவடிக்கைகள் தற்போது மும்முரம் அடைந்துள்ளன. இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், குடியரசுத் தலைவரின் சபரிமலை வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறும்போது, "குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்படவில்லை. எல்லையில் போர்ச்சூழலால் பதற்றம் அதிகரித்துள்ளதால், அவரது வருகை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் 18, 19-ம் தேதிகளில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்" என்றார்.

x