தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்க பழனிசாமி அறிவுறுத்தல்


சென்னை: எனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை வரும் 12-ம் தேதி தவிர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்திய பிறகு, நாட்டின் பல நகரங்களைத் தாக்க பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதை முறியடித்து நம் நாட்டு மக்களைப் பாதுகாத்து வரும் ராணுவத்தினருக்கு எனது இதயமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், வரும் 12-ம் தேதி எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சித் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், கொண்டாட்டங்களையும் தவிர்க்க வேண்டும்.

அதேநேரத்தில், ரத்த தானம், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நமக்காக எல்லையில் போர் புரியும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெறவும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x