சென்னை: ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 44 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.
அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி வரும் 2025-26-ம் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.19 கோடி பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அதாவது, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2.72 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.47 கோடி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்காக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த பாடநூல்கள் அடுத்த வாரத்துக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்பட உள்ளன. முதல் நாளிலேயே 1 முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலாம் பருவ பாடப்புத்தகங்களும், 8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டுக்கான புத்தகங்களும் வழங்கப்படும். அதற்கேற்ப தயார் நிலையில் இருக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் விற்பனை கடந்த ஏப்.28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களும் முழுமையாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன’’ என்றனர்.