மதுரை: 5 சதவீதம் தள்ளுபடி அறிவித்த கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மதுரை மாநகராட்சி வரலாற்றில் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ரூ.57 கோடி சொத்து வரி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்ட 3 லட்சத்து 48 ஆயிரத்து 325 கட்டிடங்கள் உள்ளன. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதால், வரும் டிசம்பர் மாதத்திற்குள் சொத்து வரியை நிலுவையில்லாமல் வசூல் செய்வதற்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா முடிவு செய்து, வருவாய் பிரிவு அதிகாரிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை 2024 - 2025ம் ஆண்டிற்கான சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் தள்ளுபடி (அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரம்) சலுகையையும் மாநகராட்சி அறிவித்து, இந்த வாய்ப்பை பயன்படுத்தி சொத்து வரியை செலுத்தி பயன்பெற மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது.
மாநகராட்சி வருவாய் பிரிவு உதவி ஆணையாளர் தலைமையில் உதவி வருவாய் அலுவலர்கள், பில் கலெக்டர்கள் 100 வார்டுகளில் களம் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் சொத்து வரி நிலுவை வைத்துள்ள வணிக கட்டிட உரிமையாளர்கள், வீட்டு உரிமையாளர்களுக்கு ‘கேட்பு அறிவிப்பு’ வழங்கி சொத்து வரியை வசூல் செய்து வந்தனர்.
மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, தினமும் சொத்துவரி வசூலிக்க குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து அதனை வசூலிக்க ஆய்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். அதனால், தற்போது மதுரை மாநகராட்சி வரலாற்றிலே இதுவரை இல்லாத வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.57 கோடி சொத்து வரி வசூல் செய்து சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ”நிலுவையில் உள்ள சொத்து வரி ரூ.9.10 கோடியும், நடப்பு சொத்து வரி ரூ.47.31 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை ஏப்ரல் மாதத்தில் வசூல் செய்வது முதல் முறை. சொத்து வரி நிலுவை உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு மூன்றரை (3 1/2) லட்சம் நோட்டீஸ் அச்சடித்து வார்டு வாரியாக விநியோகம் செய்து வருகிறது.
மே மாதம் வசூல் முடிந்தநிலையில் தற்போது அடுத்த ஒவ்வொரு மாதத்திற்கு குறைந்தப் பட்சம் இலக்காக ரூ.25 கோடி வசூல் செய்வதற்கு ஆணையாளர் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு முயற்சி பணிபுரிந்து வருகிறோம்” என்று மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறினர்.