புதுச்சேரி: புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் வாக்குச்சாவடி நிலைய முதலாவது முகவர்களுக்கு தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பு இம்மாதம் டெல்லியில் நடப்பதால் பெயர் பட்டியலை நாளைக்குள் தர ஆட்சியர் குலோத்துங்கன் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் முதலாவதுக்கான நியமனம் மற்றும் அவ்வாறு நியமிக்கபட்டவர்களுக்கு இம்மாதம் 22 மற்றும் 23ம் தேதி அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள தேர்தல் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வது குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் தலைமையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும், ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியமான குலோத்துங்கன் பேசுகையில், "அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் புதுவையில் உள்ள தொகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குச் சாவடி நிலைய முதலாவதுக்கான முகவர்களை இம்மாதம் 12ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். நாளைக்குள் தங்கள் முகவர்களின் பெயர்களை குறிப்பிட வேண்டும்" என்று அரசியல் கட்சி பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக ஆட்சியர் வட்டாரங்களில் விசாரித்தபோது, “அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்களுக்கு டெல்லியில் நடக்கும் பயிற்சி சென்று வர அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். அங்கு தங்கும் செலவு, உணவு, வாகன ஏற்பாடு தேர்தல் ஆணையம் செய்து தரும். குறைந்தப்பட்சம் புதுச்சேரியில் இருந்து 30 பேர் வரை செல்ல வாய்ப்புள்ளது" என்றனர்.