கோவை: இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நடைபெற்று வரும் சூழலில் கோவை விமான நிலையத்தில் சேவைகள் பாதிக்கப்படவில்லை. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவத்தினர் தாக்கி அழித்தனர். தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது.
சில விமான நிலையங்களில் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து விமான நிலைங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளி நாடுகளுக்கும் விமான சேவைகள் வழங்கப் படுகின்றன. தினமும் 33 முதல் 35 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன.
பதற்றமான சூழல் நிலவும் போதும் கோவை விமான நிலையத்தில் விமான சேவைகள் வழங்கம் போல் தொடர்கின்றன. இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும் போது, கோவை விமான நிலையத்தில் தற்போது வரை விமானகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மட்டும் தீவீரப்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.