சென்னை: ‘இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் போதிய அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை’ என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை விநியோகம் செய்து வருகின்றன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் திடீரென பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்நிறுவனத்தின் சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், அந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என சமூகவலை தளங்களில் செய்தி பரவியுள்ளது. இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அனைத்து பெட்ரோ பங்க்குகளிலும் போதிய அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் போதிய அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அவற்றின் விநியோகம் எவ்வித தடையின்றி சீராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் எவ்வித பதற்றமும் அடைய தேவையில்லை. பெட்ரோல் பங்க்குகளில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தி, விநியோகத்தில் தடை ஏற்படுத்த வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.