திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழுஉருவ வெண்கலச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தமிழ் திரையுலகின் மாபெரும் நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை அமைக்க 2009ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பாலக்கரை ரவுண்டானாவில், 2011ம் ஆண்டு 9 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.
ஆனால், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அந்த சிலை பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படாமல் மூடியே இருந்தது. தொடர்ந்து, சிவாஜி ரசிகர்கள் சிலையை திறக்கக் கோரி வலியுறுத்திக் கொண்டே இருந்தனர். ஆனால், மீண்டும் திமுக ஆட்சி பெறுப்பேற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி சிலை திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதய ராஜ் இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் கே.என். நேரு பதிலளிக்கையில், "சிவாஜி சிலை விரைவில் திறக்கப்படும்" என்றார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வரும் மே 8-ம் தேதி சிவாஜி சிலையை திறக்க நாள் குறிக்கப்பட்டது.
இந்நிலையில், பாலக்கரை பகுதியில் சிலையை திறப்பதில் சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டதால், சிலையை கன்டோன்ட்மென்ட் சோனா- மீனா திரையரங்கம் எதிரே அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அங்கும் பிரச்சினை வரும் என்று கருதி, இறுதியாக புத்தூர் பகுதியில் அரசு மருத்துவமனை அருகே பட்டா இடத்தில் சிவாஜி சிலை அமைக்கப்பட்டது.
இதையடுத்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழுஉருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சிவாஜி சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிவாஜி குடும்பத்தினர் பங்கேற்பு: சிவாஜி சிலை திறப்பு நிகழ்ச்சியில், நடிகர் பிரபு, அவரது மூத்த சகோதரர் ராம்குமார், பிரபுவின் மகன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜியின் குடும்பத்தினர் பங்கேற்றனர். சிலையை திறந்த முதல்வரை கட்டியணைத்தும், சிலையை அமைத்த அமைச்சர் நேருவின் கைகளை குலுக்கியும் உணர்வு பூர்வமாக நடிகர் பிரபு நன்றி தெரிவித்தார். திருச்சியில் 2011-ம் ஆண்டு நிறுவப்பட்டு, 14 ஆண்டுகளுக்கு பிறகு சிவாஜி சிலை திறக்கப்பட்டுள்ள நிகழ்வு, சிவாஜி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.