தியாகதுருகம் ஒன்றியத்தில், குடிநீர் இணைப்புக் குழாயின் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் அருந்துவதற்கு உகந்ததாக இல்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் நிதி பெறப்பட்டு, தமிழகம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் ஒவ்வொரு குடியிருப்புக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில் 14 ஆயிரம் குடியிருப்புகளுக்கு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
“இந்த குடிநீர் அருந்துவதற்கு உகந்தவையாக இல்லை; துணி துவைக்க, பாத்திரங்கள் கழுவ மட்டுமே இந்த நீரை பயன்படுத்துகிறோம். இந்த நீர் துவர்ப்புத் தன்மையோடு இருக்கிறது. இதனால் செரிமானக் கோளாறு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது என்று இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈய்யனூர், அசகளத்தூர் ஊராட்சிகளில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, அருகில் உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில், தரைதள பொது குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்ட குடிநீரை ஈய்யனூர், அசகளத்தூர் பகுதி மக்கள் போட்டி போட்டுக் கொண்டு குடத்தில் பிடித்துச் செல்கின்றனர். மேலும் சிலர் விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
பொரசக்குறிச்சி சுகாதார ஆய்வாளரிடம் இதுபற்றி கேட்டபோது, “நீரின் தன்மைக் குறித்து எனக்கு புகார் வரவில்லை. இருப்பினும் குடிநீரின் தன்மைக் குறித்து சோதனை செய்யப்படும்” என்று தெரிவித்தார். தியாக துருகம் ஒன்றியத்தில் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தை செயல்படுத்தும் தியாக துருகம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, “இப்போது தான் இது என் பார்வைக்கு வந்துள்ளது. உடனே இது குறித்து, ஊராட்சி செயலரின் அறிக்கைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.