மதுரையில் இந்த ஆண்டும் மின்தடை ஏற்படுத்தி சித்திரை திருவிழா தேரோட்டம்!


மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 5 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கும் புதைவட மின்கம்பி திட்டத்தால், மின்தடை ஏற்படுத்தி மாசி வீதிகளில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடத்தப்படுவது காலம் காலமாக தொடர்கிறது. தொகுதி அமைச்சரும், இந்து அறநிலையத் துறை அமைச்சரும் இந்தத் திட்டத்துக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல் செயல்படுவதாக பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் மின் விபத்துகளைத் தவிர்க்க பிரசித்தி பெற்ற கோயில் நகரங்களில், தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் உயர் அழுத்த மின் கம்பிகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படுகின்றன. இந்த அடிப்படையில் தமிழகத்தில் திருவாரூர், திருநெல்வேலி, மதுரை, ஸ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேரோடும் வீதிகளில் புதைவட மின்கம்பி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி புதை வட மின் கம்பி திட்டம் அறிவித்து 5 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிறைவேற்றப் படவில்லை. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் தேரோட்டம் நடக்கும் மாசி வீதிகளில் புதைவட மின்கம்பியை அமைப்பதற்கான கட்டமைப்பு உருவாக்கிக் கொடுத்துவிட்டது.

ஆனால், தற்போது வரை தமிழ்நாடு மின் வாரியம் இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் ஆமை வேகத்தில் பணிகளைச் செய்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவில் தேரோட்டம் நடக்கும் நாட்களில் மீனாட்சியமன் கோயிலைச் சுற்றி மாசி வீதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டே தேரோட்டம் நடத்தப்படுகிறது. அதனால், தேரோட்டம் நடக்கும் நாட்களில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி இன்னும் புதைவட மின்கம்பி திட்டப் பணியை முடிக்காதது ஆச்சரியமாக உள்ளது.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சட்டப்பேரவைத் தொகுதியில் தான் மீனாட்சியம்மன் கோயில் வருகிறது. அவரது தாய், தற்போது மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர்கள் சிரத்தை எடுத்து முதல்வரின் கவனத்திற்கு நேரடியாக பிரச்சினையை கொண்டு சென்றால் திட்டம் நிறைவேறியிருக்கும்.

அத்ததைய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும், அறநிலையத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் காட்டவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை முடிக்காமல் காலம் தாழ்த்தப் போகிறார்களோ தெரியவில்லை", என்று வேதனையுடன் கூறினர்.

மின் வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: தேர் கடக்கும் பகுதியில் மட்டுமே அந்த நேரத்தில் மட்டுமே மின் தடை ஏற்படுத்தப்படுகிறது. தேரோட்டம் காலை 6.30 மணிக்கு தொடங்கி, 10.30 மணிக்கு நிறைவடைந்துவிடும். இடைப்பட்ட நேர மின் தடையால் மக்களுக்கு பெரிய பாதிப்பு வராது. ஆனாலும், தமிழகத்தின் சில இடங்களில் தேரோட்டத்தின் போது மின் விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதைத் தடுக்கவே இந்த புதை வட மின் கம்பி திட்டம் 4 பகுதிகளாக செயல்படுத்தப் படுகின்றன. இதில், பகுதி 1ல் 98 சதவீதம் நிறைவடைந் துள்ளது. மற்ற பகுதிகளில் பணிகள் நடந்து வருகின்றன, என்று கூறினர்.

x