ஓசூரில் ஒற்றை யானையின் அருகே சென்று செல்பி எடுக்கும் வாகன ஓட்டிகள்!


அஞ்செட்டி- தேன்கனிக்கோட்டை சாலையில் சுற்றி திரிந்த ஒற்றை யானையின் அருகே சென்று செல்பி எடுக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, சானமாவு ஆகிய வனப்பகுதியில் தற்போது 100-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இங்குள்ள யானைகள் அவ்வப்போது தனித்தனியாக பிரிந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அஞ்செட்டியிலிருந்து உரிகம், நாட்றாம்பாளைம் மற்றும் தேன்கனிக்கோட்டை செல்லும் சாலைகளில் ஒற்றை யானை வனத்தைவிட்டு வெளியேறி சாலைகளில் நின்றுக் கொண்டு சாலையைவிட்டு நகராமல் இருப்பாதால், அந்த சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் யானை சாலையை கடந்து செல்லும் வரை காத்திருக்கின்றனர்.

சில நேரங்களில் நான்கு சக்கர வாகனங்களை துரத்தும்போது, வாகனங்கள் நீண்ட தூரம் பின்னோக்கி செல்லும் நிலை உள்ளது. சாலைகளில் சுற்றி திரியும் ஒற்றை யானைகளின் அருகே சென்று சிலர் ஆபத்தை உணராமல் செல்போனில் செல்பி எடுக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இது போன்ற நேரங்களில் யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவம் நடக்கிறது. இதேபோல் நேற்று முன்தினம் அஞ்செட்டியில் இருந்து- தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் ஒற்றை யானை ஒன்று சாலையில் நடந்து சென்று பின்னர் சாலையோரமாக நின்றது.

இதனால் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் காத்திருந்தினர். அப்போது அங்கிருந்த வாகன ஓட்டிகள் சிலர் ஆபத்தை உணராமல் யானையின் அருகே சென்று வாகனத்தில் இருந்தபடி செல்போனில் செல்பி எடுத்தனர். இதனால் கோபப்பட்ட யானை, சாலையில் நின்றிருந்த பொது மக்களை பார்த்து பிளிறிக் கொண்டு திரும்பியது. இதனால் அங்கிருந்த பொது மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். விபரீத்தை உணராமல் யானைக்கு இடையூறு செய்வதை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, சாலைகளில் சுற்றித் திரியும் ஒற்றை யானை அருகே சென்று, வாகன ஓட்டிகள் செல்ஃபி எடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவத்தால் யாவைகளுக்கு கோவத்தை ஏற்படுத்துகிறது. அப்போது ஆக்ரோஷமாகும் யானைகள் அங்கே நின்று இருக்கும் அப்பாவி பொதுமக்களை தாக்குகிறது. எனவே இது போன்ற வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்து எச்சரிக்க வேண்டும், எனக் கூறினர்.

x