சேலம்: மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை. என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வரும் கட்சி அதிமுக. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் 2 இடங்களில் புகார் கொடுக்க வந்த பெண்களிடம் காவல்துறையைச் சேர்ந்தவர்களே அத்துமீறி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் பொதுமக்கள், பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. நாட்டில் நிலவும் பிரச்சினைகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிட வேண்டும்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தோம். அந்த கோரிக்கைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு என எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிய உள்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளும் சிறப்பாக செயல்பட்டன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்களின் பிரச்சினைகள் ஆட்சியாளர்களின்காதில் விழுவது இல்லை. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரச்சினையில் தமிழக அரசு கவனம் செலுத்தாமல் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலம் இருக்கிறது. இன்னும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 லட்சம் அரசுப் பணியிடங்கள், 2 லட்சம் அரசு சார்பு பணியிடங்களை நிரப்புவதாக கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த 4 ஆண்டில் 78 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது. சட்டப்பேரவையில் எனது பேச்சு முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும். முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்திப்பதே இல்லை. அப்படியே நடந்தாலும், கேள்விகள் முன்கூட்டியே அளிக்கப்பட்டு, அந்த கேள்விகளை மட்டுமே கேட்க செய்தியாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை கண்டறிந்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பாராட்டுக்குரியது. பயங்கரவாதத்தை முறியடிக்கும் விதமாக ராணுவம் எடுத்துள்ள முதல்கட்ட பணிக்கு அதிமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.