கல்வியில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தரம் உயர்வு: பிளஸ் 2 தேர்வில் 93.27% தேர்ச்சி!


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 93.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 0.99 சதவீதம் அதிகம். மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தரம் 33-வது இடத்தில் இருந்து சற்று முன்னேறி 32-வது இடத்துக்கு வந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,532 மாணவர்கள், 7,222 மாணவிகள் உள்பட மொத்தம் 13,754 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 5,958 மாணவர்கள், 6,870 மாணவிகள் உள்பட 12,828 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.27 சதவீதம். மாணவர்கள் 91.21 சதவீதமும், மாணவிகள் 95.13 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் மாவட்டத்தின் தரம் 33-வது இடத்தில் இருந்து 32-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை 3,095 மாணவர்கள், 4,496 மாணவிகள் உள்பட 7,591 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 2,640 மாணவர்கள், 4,170 மாணவிகள் உள்பட 6,810 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 85.3 சதவீதமும், மாணவிகள் 92.75 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 89.71 சதவீதம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 அரசுப் பள்ளிகள் உள்பட 25 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இந்தத் தேர்வில் 47 அரசுப் பள்ளிகள், 3 நகராட்சி பள்ளிகள், 2 ஆதி திராவிடர் பள்ளிகள், 1 சுயநிதிப் பள்ளி, 10 அரசு உதவி பெறும் பள்ளிகள், 44 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 107 பள்ளிகள் தேர்வில் பங்கேற்றன.

x