சென்னை: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டைவிட அதிகமாக நடப்பாண்டில் 95.03 விழுக்காடு மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல ஆலோசனை பெற்று சிறந்த உயர் கல்வி பயிலும்படி அறிவுறுத்து கிறேன். அதேபோல், 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவச் செல்வங்கள், விரைவில் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று அன்புமணி கூறியுள்ளார்.