ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் விற்பனை பிரசாதத்தில் உயிரிழந்த நிலையில் குட்டி பாம்பு மீட்கப்பட்ட நிலையில், பிரசாதம் தயாரிக்க உணவுப் பாதுகாப்புத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஓசூர் தேர்ப்பேட்டை மலையில் மரகதாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பிரசாதம் விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் தனியார் மூலம் பிரசாதம் விற்பனை கடை நடத்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில், இக்கடையில் நேற்று முன்தினம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் பக்தர் பிரசாத விற்பனை கடையில் வாங்கிய புளியோதரையில் உயிரிழந்த நிலையில் குட்டி பாம்பு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர் கோயில் செயல் அலுவலரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை உணவுப் பாதுகாப்புத் துறை ஓசூர் ஒன்றிய நியமன அலுவலர் முத்து மாரியப்பன் தலைமையிலான குழுவினர் கோயிலில் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தை ஆய்வு செய்தனர். மேலும், புளியோதரை மாதிரி சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை ஒன்றிய அலுவலர் முத்து மாரியப்பன் கூறும்போது, “கோயில் பிரசாதத்தில் உயிரிழந்த நிலையில் குட்டி பாம்பு இருந்ததாகக் கூறப்படும் புளியோதரையைப் பறிமுதல் செய்து மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். ஆய்வு அறிக்கை வந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை பிரசாதம் தயாரிக்கக் கூடாது எனக் கூறி உள்ளோம். மேலும், பிரசாதம் தயாரிக்கும் சமையல் கூடத்தில் அதிரசம் மற்றும் லட்டுகள் சுகாதாரமற்ற முறையில் தயாரிப்பது கண்டறியப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.