புதுச்சேரி: இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்றதன் 80-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (08.05.2025) புதுச்சேரியில் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி கடற்கரைச் சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் தூணில் புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், புதுச்சேரி மற்றும் சென்னையிலுள்ள பிரான்ஸ் தூதர் சார்பில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் ஜீன்-பிலிப் ஹூதர், இரண்டாம் உலகப் போரின் போது உயிர் நீத்த போர்வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியின்போது, இரண்டாம் உலகப் போரின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.