தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் 25 ஆண்டுகளை திமுக நிறைவு செய்துள்ளது.
தமிழகத்தில் திமுக முதன்முதலில் 1967 மார்ச் 6ம் தேதி ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்வராக அண்ணா, ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் உடல் நலக்குறைவால் 1969 பிப். 3ம் தேதி காலமானார். அதன் பின், இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் ஒரு வாரத்துக்கு பொறுப்பு வகித்த நிலையில், 1969ம் ஆண்டு பிப்.10ம் தேதி கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பின், திமுக அரசு 4 ஆண்டுகளை மட்டுமே நிறைவு செய்திருந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பாகவே 1971ம் ஆண்டு ஆட்சியை கலைத்துவிட்டு கருணாநிதி தேர்தலை சந்தித்தார்.
அப்போது நடைபெற்ற தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று, கருணாநிதி முதல்வரானார். பின்னர், நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்த போது, அதை திமுக கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து, 1976ம் ஆண்டு ஜன.31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன்பின், 13 ஆண்டுகளுக்கு பிறகு 1989ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தது. ஆனால், அடுத்த இரு ஆண்டுகளில் 1991 ஜன.30ம் தேதி திமுக ஆட்சி 2-வது முறையாக கலைக்கப்பட்டது. அதன் பிறகு 1996, 2006ம் ஆண்டுகளில் இரு முறை ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, நேற்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதையடுத்து, திமுக ஆட்சிப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த 25 ஆண்டு ஆட்சி காலத்தில், 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழகத்தில் அதிக ஆண்டுகள்(19 ஆண்டுகள்) ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதேபோல, 1977, 80, 84, 91, 2001, 2011, 2016 என 7 தேர்தல்களில் வெற்றி பெற்று அதிக ஆண்டுகள்(30 ஆண்டுகளுக்கு மேல்) ஆட்சி செய்த கட்சியாக அதிமுக விளங்குகிறது.