வன்னியர் சங்க மாநாடு: செங்கல்பட்டு காவல் துறை விதித்த 10 கட்டுப்பாடுகள் என்னென்ன?


செங்கல்பட்டு: வன்னியர் சங்க மாநாட்டுக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு வரும் 11-ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில், டி.ஐ.ஜி கிஷா மிட்டல், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் ஆகியோரின் ஆகியோருடன் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கௌரவத் தலைவர் ஜி.கே மணி, முன்னாள் மத்திய துறை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காயர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநாடு குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

காவல் துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது: “காவல் துறை விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்கிறோம். மேலும், வாகனங்களுக்கான கட்டுப்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் உரிமத்தை அளித்தால் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அந்தந்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு அந்தந்த பகுதியைச் சேர்ந்த வன்னியர் சங்க சொந்தங்கள் இந்த அனுமதி பெற்று மாநாட்டுக்கு இரவு 10 மணிக்கு மாநாடு திட்டமிட்டபடி முடிக்கப்படும்.

இதேபோல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்தனர். அந்த நிபந்தனையும் ஏற்றுக் கொண்டோம். மேலும், காவல் துறை மற்றும் தமிழக அரசு இந்த மாநாட்டிற்கு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. நாடே திரும்பி பார்க்கும் வகையில் மாநாடு சிறப்பாக நடைபெறும். இது யாருக்கும் எதிரான மாநாடு அல்ல, அனைத்து சமுதாய மக்களுக்கான மாநாடு இது. சமூக நிதியை அடிப்படையை வைத்து மாநாடு நடைபெறும். சாதிவாரி கணக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும்” என்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் சா.அருள்ராஜ் மாநாடு நடைபெறும் அன்று அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், செங்கல்பட்டு காவல்துறை சார்பில் வன்னியர் சங்க மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

1. சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு வருபவர்கள் வாகனங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து VEHICLE PASS பெற்றே மாநாட்டிற்கு வரவேண்டும். VEHICLE PASS இல்லாத வாகனங்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

2. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மாவட்ட காவல் துறையின் அறிவுறுத்தலுக்கேற்ப அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். தடைசெய்யப்பட்ட வழித்தடங்களில் (Prohibited Routes) செல்லக் கூடாது.

3. குறிப்பாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலிருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் ECR வழியாக மாநாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் GST சாலை (NH-45) வழியாக வர வேண்டும்.

4. மாநாட்டிற்கு வருபவர்கள் இருசக்கர வாகனங்களில் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.

5. மாநாட்டிற்கு வருபவர்கள் வரும்போதும் திரும்பிச் செல்லும்போதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதோ பொது இடங்களில் மது அருந்துவதோ கூடாது.

6. 11.05.2025-ம் தேதியோ அதற்கு முன்போ ஜோதி ஓட்டம் போன்ற நிகழ்வுகள் எங்கும் நடத்திட அனுமதி கிடையாது.

7. மாநாட்டிற்கு வாகனங்களில் வரும் நபர்கள் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்தி இறங்கினால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்பதால் வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே வாகனத்தை நிறுத்தி இறங்க வேண்டும்.

8. மாநாட்டுத் திடலுக்கு அருகாமையில் கிழக்குக் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவம், கடல் நீரில் விபத்துக்களை தவிர்க்கவும் பங்கேற்பாளர்கள் மாநாட்டுத் திடலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது.

9. அன்றைய தினம் ECR சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனவே பொதுமக்கள் ECR சாலையில் பயணத்தை தவிர்த்திட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாமல்லபுரம் மற்றும் பிற சுற்றுலாத்தலங்களை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

10. அன்றைய தினம் திருவண்ணமலைக்கு பெருமளவில் வாகனம் போக்குவரத்து இருக்குமாதலால் GST (NH-45) சாலையிலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். எனவே சென்னையிலிருந்து மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருப்பத்தூர். சேலம் வழித்தடத்தினையும் மறுமார்க்கத்தில் சேலம் திருப்பத்தூர், வேலூர் வழித்தடத்தினையும் பயன்படுத்திட கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

x