திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (மே 8) திருச்சி வருகிறார். இதையடுத்து, முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் (மே 8, 9) திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்து சேர்கிறார். விமான நிலையத்தில் அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பிற்பகல் 12 மணியளவில் துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளிக் கட்டிடத்தை திறந்துவைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். முன்னதாக, பள்ளி முகப்பில் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார்.
சிவாஜி சிலை திறப்பு: பிற்பகல் டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்லும் முதல்வர், அங்கு அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 5 மணியளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு தலைமை அஞ்சல் நிலையம், புத்தூர் அரசு மருத்துவமனை, புத்தூர் நான்கு சாலை சந்திப்பு, தென்னூர், தில்லை நகர் வழியாக கலைஞர் அறிவாலயம் செல்கிறார். செல்லும் வழியில் புத்தூர் அரசு மருத்துவமனை அருகே தனியார் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார்.
திமுக செயல்வீர்ரகள் கூட்டம்: கலைஞர் அறிவாலயத்தில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி தொண்டர்களை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார். இதில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். அதன் பின்னர், சுற்றுலா மாளிகை சென்று ஓய்வு எடுக்கிறார்.
நாளை...: தொடர்ந்து, நாளை (மே 9) காலை 9 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் முதல்வர் முதல்நிகழ்வாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்து, ரூ.236 கோடி மதிப்பில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து, பஞ்சப்பூரில் ரூ.129 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, அதன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையையும் திறந்து வைக்கிறார். அதன் பின்னர், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
பின்னர், அதிநவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள 'முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை’ திறந்து வைத்து, பேருந்து முனைய வளாகத்தை முழுவதும் சுற்றிப்பார்த்து, பொதுமக்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து, பேருந்து முனையத்தின் முதல்தளத்தில் நகர பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
50 ஆயிரம் பேருக்கு பட்டா: பின்னர், பேருந்து முனையத்துக்கு அருகில் நடைபெறும் அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்குகிறார். அதைத் தொடர்ந்து, ரூ.463 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, ரூ.277 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.830 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா நிறைவுற்றதும் சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார்.
பின்னர், மாலை 5 மணியளவில் சுற்றுலா மாளிகையிலிருந்து புறப்பட்டு, குண்டூர் எம்ஐஇடி கல்லூரி வளாகத்தில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 9-வது மாநாட்டை தொடங்கி வைக்கிறார். பின்னர், அன்று இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதல்வரின் 2 நாள் திருச்சி சுற்றுப் பயணத்தையொட்டி, திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரை வரவேற்க திமுகவினர் மாநகர் முழுவதும் கட்சி கொடிகளை கட்டி, மின் விளக்குகளால் அலங்காரம் செய்து வருகின்றனர்.