யானை நடமாட்டம்: 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சிமுனை செல்ல தடை!


ஊட்டி: வனத்துக்குள் செல்லாமல் யானை தொடர்ந்து தொட்டபெட்டா பகுதியிலேயே நடமாடி வருவதால் மூன்றாம் நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சிமுனை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் தற்போது கோடை மழை பெய்ததால் பசுமைக்கு திரும்பியுள்ளது. இதனால் யானைகளுக்கு தேவையான உணவு எளிதில் கிடைப்பதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர் நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள கரிமரா ஹட்டி மற்றும் பழத்தோட்டம் பகுதியில் ஒற்றை யானை உலா வருகிறது. பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிவதால் தேயிலை தோட்டத்திற்கு செல்ல முடியாமல் தொழிலாளர் அவதியடைந்தனர். இந்நிலையில் சிலர் யானையை ட்ரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதாக கூறி, அதனை தொந்தரவு செய்துள்ளனர். ட்ரோன் கேமரா சத்தம் காரணமாக யானை திசை மாறி தொட்டபெட்டா பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

மூன்று நாட்களாக இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் யானை வனத்துக்குள் செல்லாமல் தொட்டபெட்டா பகுதியிலேயே நடமாடி வருவதால் மூன்றாம் நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சிமுனை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

x