“நானே தவறு செய்தாலும் முதல்வர் ஏற்க மாட்டார்!” - அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்து


படம்:நா.தங்கரத்தினம்

அமைச்சராகிய நானே தவறு செய்தாலும் அதை முதல்வர் ஏற்க மாட்டார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து மலை கிராமங்களுக்கு புதிய பேருந்துகளை இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ஐ.பெரிய சாமி கலந்து கொண்டு பேருந்துகளை இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி தலைமை வகித்தார். போக்கு வரத்துக் கழக திண்டுக்கல் மண்டல மேலாளர் முத்து கிருஷ்ணன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் – சோலைக்காடு, திண்டுக்கல் – பன்றிமலை, கே.சி.பட்டி, வத்தலக்குண்டு – கிளாவரை, வத்தலக்குண்டு – பன்றிமலை, வத்தலக்குண்டு – தாண்டிக்குடி, வத்தலக்குண்டு – ஊத்து ஆகிய ஊர்களுக்கு பேருந்துகளை அமைச்சர் ஐ.பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஸ்.காந்தி ராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புறம்போக்கில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி கூறுகையில், சிறுமலையில் பட்டா கோருபவர்களுக்கு வனத்துறையுடன் கலந்து பேசி அதற்கான வாய்ப்பு இருந்தால் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய பேருந்துகள் இயக்குவதில் எந்த ஒரு தொகுதியும் புறக்கணிக்கப்படாது, படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் புதிய பேருந்துகள் இயக்கப் படும். யார் தவறு செய்தாலும், அமைச்சராகிய நானே தவறு செய்தாலும் அதை தமிழக முதல்வர் ஏற்க மாட்டார் என்று கூறினார்.

x