திமுக ஆட்சியில் விஐபிகளுக்காக சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 72-வது வார்டு பைக்காரா பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள நியாய விலை கடை கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் தீவிரவாதத்தை தடுக்க வேண்டும். பிரதமர் மோடி துணிந்து நின்று, எந்த ஒரு பிரதமரும் எடுக்காத ராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளார். அவருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். திமுக ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அனைவரும் இந்த ஆட்சியை வெறுக்கிறார்கள். மக்கள் நிம்மதியாக தூங்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு நகர்ப் பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சித்திரை திருவிழாவில் எந்த ஒரு துயர சம்பவமும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் சித்திரை திருவிழா விஜபிகளுக்காக நடக்கிறது. விஐபிகளுக்கு காட்டும் அக்கறையை மக்களிடம் காட்டச் சொல்லுங்கள். மாவட்ட நிர்வாகம் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.