திருநெல்வேலி: 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழகத்தில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியா சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, தற்போது மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும். பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். 9 இடங்களில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தேச ஒற்றுமை குறித்து பேசிய தமிழக முதல்வர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவேல் வீரவேல் எனும் ஆபரேஷனை தொடங்குவோம்.
பாஜக கூட்டணிக்கு வருமாறு திருமாவளவனுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. அவர் எனது நெருங்கிய நண்பர். நீட் தேர்வு எழுதும் மாணவிகளை தலைவிரி கோலமாக அனுப்புவது தேவையில்லாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.