“திமுகவின் 4 ஆண்டு ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு” - தமிழிசை விமர்சனம்


தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணுவ வீரர்களின் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டு. தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நாடே துணை நிற்கிறது. காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவும். முன்பு ரத்தத்தால் சிவந்த ரோஜாக்கள் தற்போது வெள்ளை ரோஜாக்களாக மலரும். தாக்குதலில் பெண்கள் முன்னிறுத்தப்பட்டது பிரதமர் பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. தீவிரவாத தாக்குதலை எந்த ரூபத்திலும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வேண்டும் என நான் கூறியதற்கு, மதக் கலவரத்தை தூண்டுவதாக தமிழக அமைச்சர்களும் முதல்வரும் பேசுவது கண்டிக்கத்தக்கது. பிற மாநில முதல்வர்கள் பிரதமருக்கும் ராணுவத்திற்கும் பாராட்டு தெரிவிக்கும் போது, தமிழக முதல்வர் பாராமுகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.

தி.மு.க அரசின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் செவிலியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வேங்கை வயல் பிரச்சினைக்கு இரண்டு ஆண்டுகள் கடந்தும் தீர்வு காணப்படவில்லை.

தி.மு.க.வினர் நான்காண்டு நிறைவை கொண்டாடும் போது மக்கள் திண்டாடுகிறார்கள். அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது மகன் மட்டும் தான் முதல்வராக வர முடியுமா ? யார் வேண்டுமானாலும் அந்த பதவியை அடைய முடியும். 2026 தேர்தலில் தி.மு.க.வின் சந்தர்ப்பவாத ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x