அனைவரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் ஆட்சி: 4 ஆண்டு சாதனை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கர், சேகர்பாபு, அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர்.

சென்னை: தமிழகம் இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. எங்களுடைய ஆட்சி வழக்கமான ஆட்சி அல்ல, அனைவருடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகின்ற ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் வறுமை இல்லை, பட்டினிச் சாவு இல்லை, பணவீக்கம் இல்லை, பெரிய சாதி மோதல்கள் இல்லை, மதக்கலவரங்கள் இல்லை, வன்முறைகள் இல்லை.

இப்படி, சமூகத்தை பின்னோக்கித் தள்ளும் தீயவை இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். ஏழை, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் சமத்துவத்தை நோக்கியும் இந்தச் சமூகம் முன்னேற வேண்டும். சமூகநீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதைத்தான் என் வாழ்க்கையின் பயனாக நினைக்கிறேன்.

இந்த ஆட்சி அமைவதற்கு முன்னால், 10 ஆண்டு காலமாக படுபாதாளத்துக்கு தள்ளப்பட்டு கிடந்த தமிழகத்தை தட்டியெழுப்பி விடியலைக் கொடுக்க வேண்டும் என்று உறுதியேற்று, அதற்கு விடியல் ஆட்சி என்று பெயரிட்டோம். இந்த நான்காண்டுகளில், ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு பயனாளிக்கும் இதுவரைக்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. “எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கின்ற சீர்” என்று சகோதரிகள் சுயமரியாதையுடன் பேசுகிறார்கள். அதுபோல், விடியல் பயணப் பேருந்துகளை “ஸ்டாலின் பஸ்” என்கிறார்கள். இந்த திட்டத்தில் இதுவரைக்கும், சுமார் 685 கோடி பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலம், நாள்தோறும் 18 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள். இப்போது குழந்தைகள் பள்ளிக்கு வருவதும் கற்றல் திறனும் ஊட்டச்சத்தும் அதிகரித்திருக்கிறது. அடுத்து, இளைஞர்களுக்கான புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் இதுவரைக்கும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதனால், கல்லூரிகளில் மாணவ – மாணவிகளுடைய சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது.

இப்படி மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள் என்று இப்படி எல்லோருக்குமான திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். மத்திய அரசு வெளியிடும் அனைத்து புள்ளி விவரங்களிலும் தமிழகம்தான் முன்னிலையில், முதலிடத்தில் இருந்து விருதுகளை வாங்குகிறது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களிலேயே பல ஊடகங்கள் இந்தியாவின் நம்பர்-1 முதல்வர் என்று என்னைச் சொன்னார்கள். அது எனக்கான பெருமை இல்லை. தமிழக மக்களுக்கான பெருமை. தமிழகம் இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இது வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி. இது வழக்கமான ஆட்சி அல்ல, அனைவருடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகின்ற ஆட்சி. இவ்வாறு முதல்வர் கூறினார்.

முன்னதாக, விழாவில், முதல்வர் ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் மற்றும் பொதுவாழ்வை குறிப்பிடும் வகையில், ‘ தி வீக்’ இதழ் தயாரித்துள்ள ‘தி மாடர்டன் திராவிடியன் ஐகான்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, சிவசங்கர், அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தி வீக் தலைமை இணை ஆசிரியர் ரியாத் மேத்யூஸ், தலைமை செய்தியாளர் லக்ஷ்மி சுப்பிரமணியம், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

x