விழுப்புரம்: தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.
வணிகர் தினத்தை முன்னிட்டு மனித நேய வர்த்தக சங்கம் சார்பில் நலிவடைந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நேற்று முன் தினம்இரவு நடைபெற்றது. மாநில வர்த்தக அணி பொருளாளர் அப்துல்ஹக்கீம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கவுஸ்பாஷா வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வாழ்த்துரை வழங்கினார். நலத் திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, “ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு, வணிகர் தினத்தை அரசினர் தினமாக அனுசரிப்பதற்கான அரசாணை வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். வணிகர்களின் நலனை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும். இது சாதாரண, சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பலனை அளிக்கும்.
தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது. இங்கு, எந்தவொரு பிரிவினரும், மக்கள் மத்தியில் மோதல் உருவாகும் கருத்தை வெளியிட்டால் தமிழக அரசு தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்து தமிழகத்தில் நிலவக்கூடிய சமூக அமைதி, சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் கருத்தாக உள்ளது. இதுபோன்று எதிர்காலத்தில் மக்களை பிளவுப்படுத்தக்கூடிய கருத்துக்களை யாரும் சொல்லக்கூடாது என்கிற வகையில், அவர் மீது தமிழக அரசு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்எல்ஏ, மாநிலச் செயலாளர் முஸ்தாக்தீன், ரவிக்குமார் எம்.பி, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் குலாம் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ரியாஸ் அகமது நன்றி கூறினார்.