மத்திய அமைச்சரவையில் இஸ்லாமியரை நியமிக்க வேண்டும்: இந்திய ஹஜ் கமிட்டி கூட்டமைப்பு கோரிக்கை


நாகை: மத்திய அமைச்சரவையில் இஸ்லாமியரை நியமிக்க வேண்டும் என பிரதமருக்கு இந்திய ஹஜ் கமிட்டி கூட்டமைப்பு தலைவர் அபூ பக்கர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு நேற்று முன்தினம் இரவு வந்த அவர், ஆண்டவர் சமாதியில் வழிபாடு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நாட்டில் 1.25 லட்சம் முஸ்லிம்கள் இந்த முறை புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதன் மூலம் ஹஜ் யாத்திரைக்கான தனியார் பயண முகவர்கள் விவகாரம் ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்தில் முகவர்களாலேயே குளறுபடிகள் ஏற்படுகின்றன.

இந்த விவகாரத்தில் சவூதி அரேபியா அரசுக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. எனவே, நிகழாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள பணம் செலுத்தி, தேர்வு செய்யப்படாதவர்கள் கவலைப் பட வேண்டாம். அவர்கள் 2026-ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்து, அதற்கான ஆணையையும் பிறப்பித்துள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகள் சுஷ்மா சுவராஜ் அமைச்சராக இருந்தபோது நேரிட்டதில்லை. குறிப்பாக, மத்திய அமைச்சரவையில் இஸ்லாமியர் ஒருவர் இருந்தால் இதுபோன்ற பிரச்சினை எழாது. எனவே, அமைச்சரவை மாற்றத்தின் போது இஸ்லாமியர் ஒருவரை மத்திய அமைச்சராக பிரதமர் மோடி நியமிக்க வேண்டும். இக்கோரிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்றினால் 40 கோடி இஸ்லாமியர்கள் நன்றி உள்ளத்துடன் மத்திய அரசுக்கு கடமைப்பட்டிருப்போம் என்றார்.

x