திருவையாறு: கண்டியூரில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி கோயில் நிலம் மீட்பு!


திருவையாறு: கண்டியூரில் உள்ள பிரம்ம சிரகண்டீஸ்வரர் சிவன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோயில் சுற்றுச்சுவரையொட்டி உள்ள கோயில் இடத்தை வாடகைக்கு எடுத்து கடைகள், வீடுகளாக மாற்றி சிலர் வசித்து வந்தனர். ஆனால் முறையாக வாடகையைச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, கோயில் சுற்றுச்சுவரை புதுப்பிக்கும் நோக்கில் அனைவரையும் காலி செய்யுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி வந்த நிலையில், யாரும் காலி செய்யவில்லை. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஜோதி லட்சுமி அறிவுறுத்தலின் படி உதவி ஆணையர் கம்ஸன் தலைமையில் ஆய்வாளர்கள் பாபு, குண சுந்தரி, கோயில் செயல் அலுவலர்கள் ராஜ ரத்தினம், அசோக்குமார், சிவராஜன் உள்ளிட்டோர் நேற்று போலீஸார் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர். இதன் மூலம் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி கோயில் நிலம் மீட்கப்பட்டது.

x