சிங்கம்புணரி அருகே ”பேத்தப்பன் மகாராஜாவை” வேப்பிலையால் விரட்டும் விநோத விழா!


சிவகங்கை: சிங்கம்புணரி அருகே ‘பேத்தப்பன் மகாராஜாவை’ வேப்பிலையால் விரட்டும் விநோத திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கட்டுக்குடிப்பட்டியில் செல்வ விநாயகர், மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 4-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை மாமன், மச்சான் உறவு நீடிக்க வேண்டி, அவர்களுக்கு வண்ண சாயங்களை பூசி மகிழ்ந்தனர். தொடர்ந்து, வெள்ளையம்மாள் சின்னக்கருப்பர் கோயில் முன்பாகக் கூடி கிராம மக்கள் கும்மியடித்தனர். பக்தர்கள் சிலர் பல்வேறு தெய்வங்களின் வேடமிட்டு சாமியாட்டம் ஆடினர்.

தொடர்ந்து, செல்வ விநாயகர், மகாமாரியம்மன் சென்றனர். அங்கு ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்தனர். பின்னர், தலையில் கூடையை கிரீடமாக அணிந்தும், கோழி இறகுகளை மீசை போன்று செருகியும் பேத்தப்பன் மகாராஜா வேடமிட்டவரை அழைத்து வந்தனர். அவர் கையில் உலக்கை வைத்திருந்தார். அவருக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், அவரை வேப்பிலை மூலம் இளைஞர்கள் விரட்டினர். அதேபோல், அவரும் தான் வைத்திருந்த உலக்கையால் இளைஞர்களை விரட்டினார்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ”எங்கள் பகுதியில் முன்னோர்களை அக்னி நட்சத்திரம் சமயத்தில் அம்மை நோய் தாக்கியது. அதை விரட்டும் விதமாக பாரம்பரியமாக பேத்தப்பன் மகாராஜாவை விரட்டும் நிகழ்வை நடத்தி வருகிறோம்” என்றனர்.

x