சிவகாசியில் திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி: சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு!


சிவகாசி: மாநகராட்சியில் திருத்தங்கல் கண்மாய் கரையில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் துரைபாண்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செங்குளம் கண்மாய் கரையில் நம்ம டாய்லெட் திட்டத்தில் கட்டப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது சுகாதார வளாகம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சுகாதார வளாகம் கடந்த மார்ச் மாதம் ரூ.12.60 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் நீர்நிலை பகுதியில் அனுமதியின்றி சுகாதார வளாகம் கட்டப்பட்டதாக கூறி, இடித்து அப்புறப்படுத்த வட்டாட்சியர் உத்தரவிட்டார். திங்கட்கிழமை நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு அனுமதி கோரி தீர்மானம் முன்வைக்கப்பட்டது. தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக கவுன்சிலர் துரை பாண்டி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டதாக மேயர் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் துரை பாண்டி சுகாதார வளாகம் மீது ஏறி பெட்ரோலை ஊற்றிக்கொண்டு 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த சிவகாசி டிஎஸ்பி பாஸ்கர், மாநகர திமுக செயலாளர் உதய சூரியன், மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர் சேது ராமன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி துரை பாண்டியை கீழே இறங்க வைத்தனர். வருவாய்த் துறையினர் சுகாதார வளாகத்தை இடிக்காமல் திரும்பி சென்றனர்.

x