திருவண்ணாமலை: பருவதமலை ஏறிச் சென்ற இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் உட்கோட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென் மாதிமங்கலம் கிராமத்தில் பிரசித்திபெற்ற பருவதமலை உள்ளது. தென் கயிலாயம் என்றழைக்கப்படும் பருவதமலையில் உள்ள சிவன் கோயிலுக்கு கடுமையான மலைப் பாதையை கடந்து செல்ல வேண்டும்.
சமீப நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் பருவத மலைக்கு சென்று வருகின்றனர். அதன்படி,சென்னை தாம்பரம் கணேஷ் நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (33) என்பவர் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பருவத மலையில் ஏறிச் சென்றுள்ளார்.
மலை உச்சியின் அருகில் சென்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இந்த தகவலறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு பிரகாசை நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் மலையடிவாரத்துக்கு மீட்டு வந்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.
இதையடுத்து பிரகாஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கடலாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.