தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியை: தூத்துக்குடி நெகிழ்ச்சி


தூத்துக்குடி: தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இருவரை, ஆசிரியை தனது சொந்த செலவில் விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஜெயா, இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை, தனது செலவில் சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறி ஊக்கப்படுத்தியுள்ளார்.

அதன்படி, ஜெயாவிடம் 8ம் வகுப்பு படித்த மாணவி கோகிலா, மாணவர் ஆல்வின் நிஷாந்த் ஆகிய இருவரும் இத்தேர்வில் வெற்றி பெற்றனர். இருவரையும், ஆசிரியை ஜெயா தனது சொந்த செலவில் சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றார். அங்கு பல்வேறு இடங்களை பார்த்த பின்னர், தூத்துக்குடிக்கு அழைத்து வந்துள்ளார். ஆசிரியை ஜெயாவின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றது.

x