சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் (56) மாரடைப்பு காரணமாக நேற்றிரவு 11.30 மணியளவில் காலமானார்.
பசுமை வழிச்சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் தங்கியிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அவர்களின் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தலைவர்கள் இரங்கல்:
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ‘மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி J. சத்ய நாராயண பிரசாத் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரைஇழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய தனது தந்தையின் வழியில் சட்டத்துறையை தேர்வு செய்து, வழக்கறிஞராகி, அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பான வழக்குகளிலும் திறம்பட வாதிடும் திறமை படைத்தவர்.
வழக்கறிஞராக நீண்ட அனுபவத்துடன் 2021-இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். நீதித்துறையில் மேலும் தனது சிறந்த பங்களிப்பை, சாதனைகளைப் படைக்க வேண்டிய தருணத்தில் நிகழ்ந்து விட்ட அவரது எதிர்பாராத மறைவு நீதித்துறைக்கும் - நீதி பரிபாலன முறைக்கும் பேரிழப்பாகும்.
தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாருக்குக் காவல்துறை அணிவகுப்புடன் கூடிய இறுதி மரியாதை செலுத்தப்படும். பணியில் இருக்கும் நீதிபதி ஒருவரை இழந்து வருந்தும் சக நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நீதித்துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அவர்கள் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையளிக்கிறது. அவரது இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளில் அமைதி பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். நீதிமுறைமைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் மக்களோடு மக்களாகப் பழகி எளிமையின் அடையாளமாய் திகழ்ந்த நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி தமிழ் மண்ணிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர் பெருமக்கள், நீதித்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். மாண்பமை நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்’ எனத் தெரிவித்துள்ளார்