திருநெல்வேலி: கல்லிடைக்குறிச்சி அருகே கம்பி வேலியில் சிக்கிய கரடி குட்டியை வனத்துறையினர் மீட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மலையடிவாரப் பகுதியிலுள்ள ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம் பட்டி, பாப்பான்குளம், நெசவாளர் காலனி, பொட்டல், மூலச்சி பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ளது.
இந்நிலையில் முண்டன் துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் அம்பா சமுத்திரம் வனச்சரகதுக்கு உட்பட்ட வெளிமண்டல பகுதியான கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தின் கம்பி வேலியில் கரடி ஒன்று சிக்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா உத்தரவின் பேரில் அம்பா சமுத்திரம் வனச்சரக பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று கரடி குட்டியை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். அந்த குட்டி கரடி தனது தாய் கரடியுடன் இணைந்து வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.