புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை? - வைத்திலிங்கம் அதிரடி பதில்


புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 20-ல் பந்த் போராட்டம் நடக்கிறது என்று காங்கிரஸ் மாநில தலைவர் எம்பி வைத்திலிங்கம் தெரிவித்தார். அப்போது இண்டியா கூட்டணிக்கு தலைமை யார் என்ற கேள்விக்கு பதில்தந்தார்.

நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர். அப்போராட்டத்துக்கு இண்டியா கூட்டணி கட்சியினரின் ஆதரவை கோரினர். அதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் எம்பி வைத்திலிங்கம், காங்கிரஸ் எம்எல்ஏ வைத்திலிங்கம், திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமசந்திரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் செயலர் தேவபொழிலன், சிபிஐ எம்எல் பாலசுப்ரமணியன், மதிமுக மாநில செயலர் ஹேமா பாண்டுரங்கன் மற்றும் இண்டியா கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

இக்கூட்டம் தொடர்பாக எம்பி வைத்திலிங்கம் கூறியதாவது: “மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் தொழிற்சங்கங்கள் வரும் 20-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதற்காக எங்களிடம் தொழிற்சங்கத்தினர் ஆதரவு கோரினர்.

அதையடுத்து இப்போராட்டத்துக்கு இந்தியா கூட்டணி ஏகமனதாக ஆதரவளிக்கிறது. அன்றைய தினம் புதுச்சேரியில் பந்த் போராட்டம் நடைபெறும். வேலைவாய்ப்பு திண்டாட்டம், உரிய ஊதியம் கிடைக்காத நிலை, விலைவாசி உயர்வு ஆகியவை போராட்டத்துக்கு முக்கிய காரணமாகும். இது நகரப்பகுதி மட்டுமில்லாமல் கிராமப்பகுதியிலும் பாதிப்பு உள்ளது.

தொழிற்சங்கம் நடத்தும் போராட்டத்துக்கு இண்டியா கூட்டணி முழு ஆதரவு தருகிறது. அனைவரும் இணைந்து புதுச்சேரியில் பந்த் நடத்துகிறோம். மறியல்களில் தொழிற்சங்கத்தினர் ஈடுபடுவார்கள். அவர்களுடன் நாங்களும் இணைந்து செயல்படுவோம்.
இண்டியா கூட்டணியினர் அந்தந்த பிரச்சினைகளுக்கு அவ்வப்போது போராட்டம் நடத்துகிறோம். நேரம் இல்லாததால் தனித்தனியாக சூழலுக்கு ஏற்ப போராட்டம் நடத்தி விடுகிறோம். அரசு கவனத்துக்கு கொண்டு செல்ல அந்தந்த கட்சிகள் போராட்டம் நடத்துகிறோம். இதனால் ஒற்றுமை இல்லை என கருத்தில்லை.

காங்கிரஸை ஓடாத வண்டி என திமுக விமர்சித்ததாக கேட்கிறீர்கள். ஆனால் திமுக யாரை சொன்னார்கள் என அவர்களிடம் விளக்கம் கேளுங்கள். காங்கிரஸ் என திமுக பயன்படுத்தவே இல்லை. புதுச்சேரி இண்டியா கூட்டணிக்கு தலைமை யார் வகிக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். மக்கள் தான் தலைமை. அவர்கள் எதிர்ப்பார்ப்புதான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.

x