பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் நடத்துங்கள்: போக்குவரத்துக் கழக இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை!


தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான நடைமுறைகள் குறித்து ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இவை சில நேரங்களில் முறையாக கடைபிடிக்கப் படுவதில்லை என்ற புகார்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாற்றுத் திறனாளி பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும்போது, பேருந்தை முறையாக நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு முன்போ, பின்போ ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தாமல், சரியான இடத்தில் நிறுத்தி மாற்றுத் திறனாளிகளை சிரமப்படுத்தாமல் பேருந்தில் ஏற்றவேண்டும்.

பேருந்தில் இடமில்லை என்று வேண்டுமென்றே பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளிகளை நடத்துநர்கள் இறக்கிவிடக்கூடாது. மாற்றுத் திறனாளிகள் என்று பேருந்தில் இருக்கை ஒதுக்கப்பட்டதை அறிவித்து, அவர்களை அந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய உதவ வேண்டும். அவர்கள் இருக்கையில் அமர்ந்தவுடன் கனிவுடன் அவர்களிடம் பேசி, பயணச்சீட்டுகள் வழங்கி, அவர்கள் இறங்கப் போகும் இடத்தை அறிந்து, அங்கு பேருந்தை நிறுத்தி, மனிதாபிமானத்துடன் அவர்கள் இறங்கும்வரை காத்திருந்து பின் பேருந்தை இயக்க வேண்டும்.

பேருந்து நிலையத்தில் பேருந்து புறப்படும் வரை மாற்றுத் திறனாளிகள் இருக்கையில் சாதாரண பயணிகளை அமர வைக்கக்கூடாது. ஒருவேளை கடைசி நேரத்தில் மாற்றுத்திறனாளி பயணி ஏறினால், இருக்கையை தர வேண்டும் என்று சொல்லி சாதாரண பயணியை அமர வைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி பயணிகளின் மனம் புண்படும் விதமாகவோ, அவர்களை எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ அவர்களை பேசக்கூடாது. அவர்களை கனிவுடனும், அன்புடனும் நடத்தவேண்டும். அவர்கள் பேருந்தில் ஏறும்போதும், இறங்கும் போதும் கண்காணித்து, ஓட்டுனருக்கு உரிய சைகை செய்து, ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.

அரசு அறிவித்துள்ளபடி, மாற்றுத்திறனாளிகள் அசல் தேசிய அடையாள அட்டை வைத்திருந்தால் 40 சதவீதம் மாற்றுத்திறன், அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அவர்களது துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய கட்டணமில்லா பயணச்சீட்டுகளை நடத்துநர் வழங்கவேண்டும். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் புறநகர் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி, 75 சதவீத பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இந்த சுற்றறிக்கையை அனைத்து பணிமனைகளுக்கும் அனுப்பி நடத்துநர், ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி, நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x