திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுல்ள சிவாஜி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 8) திறந்து வைக்கிறார் என மேயர் மு.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில், 14 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியின்போது, மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக சிலை திறப்பு விழா கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், பாலக்கரை ரவுண்டானாவுக்கு பதிலாக வேறு இடத்தில் சிவாஜி சிலை திறக்கப்படும் என தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, மத்திய பேருந்து நிலையம், சோனா - மீனா தியேட்டர் எதிரே வார்னர்ஸ் சாலையில் உள்ள மினி பூங்காவில் சிவாஜி சிலை நிறுவப்பட்டது.
இந்நிலையில் பொது இடங்களில் சிலை நிறுவக்கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சிவாஜி சிலையை தனியார் பட்டா இடத்தில் நிறுவ முடிவு செய்யப்பட்டது. திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை அருகே வயலூர் சாலை பிரியும் இடத்தில், மறைந்த குமாரவேல் குடும்பத்தினருக்கு சொந்தமான இடம், திமுக திருச்சி மேற்கு மாநகர செயலாளர் பெயரில் தானசெட்டில்மென்டாக பெறப்பட்டது. அந்த இடத்தில் சிவாஜி சிலை நிறுவுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியை திமுக மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து மேயர் அன்பழகன் கூறியது: சிவாஜி சிலை நிறுவுவதற்காக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் நாளைக்குள் (இன்று) பெறப்படும். மே 9ம் தேதி நடைபெறும் பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள திருச்சிக்கு மே 8ம் தேதி (நாளை) வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அன்று மாலை நடிகர் சிவாஜி சிலையை திறந்து வைக்க உள்ளார். அதற்காக பீடம், சிலை நிறுவும் பணி தற்போது நடைபெற்று வருகிறது” என்றார்.