சிவகங்கை: திருப்புவனம் அருகே தான் சேமித்து வைத்த ரூ.1 லட்சத்தை கரையான் அரித்ததால் பெண் கூலித் தொழிலாளி வேதனை அடைந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளாதரி ஊராட்சி கக்கினியார்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பி (30). முத்துக்கருப்பி தனது 2 மகள்கள், ஒரு மகனுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
கூலி வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். இவர் தகர உண்டியலில் பணத்தை சேமித்து வந்தார். அவற்றை பாதுகாக்க உண்டியலை வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தார். ரூ.500 தாள்களாக ரூ.1 லட்சம் வரை சேமித்து வைத்திருந்தநிலையில், குழந்தைகள் காதணி விழாவுக்காக நேற்று உண்டியலை திறந்து பார்த்தார்.
அதில் பல 500 ரூபாய் நோட்டுகளை கரையான்கள் அரித்திருந்தன. சேமிப்பு பணம் முழுவதும் வீணாகியதால் முத்துக் கருப்பி கடும் வேதனையில் உள்ளார். தனது வாழ்வாதாரமே இந்த பணம் தான் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், ”சேதமடைந்த பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.