மதுரை: மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி நகருக்குள் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (மே 7) இரவு 11 முதல் ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்லவும், நிறுத்தவும் அனுமதி கிடையாது. அனுமதி சீட்டுடன் வரும் வாகனங்களை 8ம் தேதி காலை 6 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
மஞ்சள் நிற அனுமதி சீட்டு வாகனங்கள் மேல ஆவணி மூல வீதியில் நிறுத்த வேண்டும். இவ்வாகனங்கள் பழைய டிவிஎஸ் சந்திப்பு, வடக்கு-மேல மாசி வீதி சந்திப்பு, வடுக காவல் கூடத்தெரு, தானப்ப முதலி தெரு, மீனாட்சி காபி பார் வழியாக வர வேண்டும், ஃபண்டு ஆபிஸ் ஜான்சி ராணி பார்க், நேதாஜி ரோடு, ஆரியபவன் சந்திப்பு, டிபிகே ரோடு வழியாக வெளியே செல்ல வேண்டும். ரோஸ் நிற அட்டை வாகனங்கள் வடக்கு ஆவணி மூல வீதியில் நிறுத்த வேண்டும்.
மஞ்சள் நிற அட்டை வாகனங்கள் வரும் வழியாக வந்து தளவாய் தெரு, வக்கீல் புது தெரு வழியாக வெளியே செல்ல வேண்டும். நீல நிற அட்டை வாகனங்கள் தெற்கு ஆவணி மூல வீதியில் நிறுத்த வேண்டும். இந்த வாகனங்கள் கட்டபொம்மன் சிலை, நேதாஜி ரோடு, ஆரிய பவன் சந்திப்பு, ஜான்சிராணி பூங்கா வழியாக வந்து, ஜடாமுனி கோயில் சந்திப்பு, வெங்கலகடை தெரு, விளக்குத்தூண் வழியாக வெளியே செல்ல வேண்டும்.
8ம் தேதி அதிகாலை 5 மணி முதல் திருக்கல்யாணத்துக்கு வரும் கார் அனுமதி சீட்டு இல்லாதவர்கள், இரு சக்கர வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை கிழக்கு, தெற்கு வடக்கு மாசி வீதிகளில் போக்கு வரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு இன்றி நிறுத்த வேண்டும். பக்தர்களும், பொது மக்களும், வர்த்தர்களும் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.