‘லட்சியம் நிறைவேறும் வரை நிறுத்த வேண்டாம்' - ஆபரேஷன் சிந்தூருக்கு ரஜினி பாராட்டு; முதல்வர், இபிஎஸ் வரவேற்பு!


சென்னை: போராளியின் சண்டை தொடங்கியது. லட்சியம் நிறைவேறும் வரை நிறுத்த வேண்டாம் என ஆபரேஷன் சிந்தூர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஆகிய தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘போராளியின் சண்டை தொடங்கியது. இலட்சியம் நிறைவேறும் வரை நிறுத்த வேண்டாம். முழு தேசமும் உங்களுடன் உள்ளது. ஜெய்ஹிந்த்’ எனத் தெரிவித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனது பதிவில் டேக் செய்துள்ளார்.

இது குறித்து அவர் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக, தமிழகம் உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய பாதுகாப்பு படையை நான் பாராட்டுகிறேன்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது மக்களைப் பாதுகாப்பதற்கும் நமது ராணுவத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

x