திருப்பூர்: மாநகர காவல்துறை சார்பில், தோட்டத்து வீடுகளில் தனியாக வசிப்பவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், திருப்பூர் மாநகரில் உள்ள 9 காவல் நிலையங்களில் இதற்காக 9 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாநகர் முழுவதும் உள்ள முதியவர்கள் தனியாக வசிக்கும் அனைத்து வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளையும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை சம்பவத்துக்கு பிறகு, இன்று (நேற்று) முதல் திருப்பூர் மாநகரில் கணக்கெடுப்பை தொடங்கி விட்டோம். வயதானவர்களை குறிவைத்து நிகழும் கொடூர கொலைக் குற்றங்கள், திருப்பூர் புறநகர் பகுதிகளில் மட்டுமின்றி, நகர்ப்புறங்களில் நிகழ வாய்ப்புள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கையாக இந்த பணிகளை தொடங்கியுள்ளோம். நகரத்தில் உள்ள 9 காவல் நிலையங்களும் தலா ஒன்று வீதம், 9 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நன்கு அனுபவம் வாய்ந்த 2 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநகர பகுதி மற்றும் மாநகர் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பர். சிறப்புக் குழுவினர் முதியோர் வசிக்கும் தனிமைப் படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் நகர எல்லையில் அமைந்துள்ள பண்ணை வீடுகளில் சிறப்பு கவனம் செலுத்துவர்.
கணக்கெடுப்புப் பணியை முடிக்க சில மாதங்கள் ஆகலாம். கணக்கெடுப்புப் பணியின் போதே, குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எஸ்ஒஎஸ் செயலி மற்றும் பிற அவசர உதவி அழைப்புகள் குறித்தும் பொதுமக்களிடையே தெரிவித்து வருகிறோம். சேகரிக்கப்பட்ட தரவுகள் உடனடியாக கூகுள் சீட்ஸ் வழியாக பதிவேற்றப்படுகின்றன, என்றார்.