கோவை: பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி தொழிற்பேட்டை வரை விபத்து ஏற்படுவதை தடுக்க 6 வழி சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி தெரிவித்தார்.
பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவுப்படுத்தப்பட்டது. அப்போது, பொள்ளாச்சி மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி தொழிற்பேட்டை வரை நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. இரு புறமும் சர்வீஸ் ரோட்டில் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இப்பகுதியில் பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் இரும்பு தடுப்பு கம்பிகளால் நான்கு வழிச் சாலையின் அகலம் குறைந்து அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, நகரமன்ற தலைவர் சியமளா நவநீத கிருஷ்ணன் ஆகியோர் பொள்ளாச்சி - உடுமலை சாலையில் மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலம்பட்டி தொழிற்பேட்டை வரை நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து எம்.பி.ஈஸ்வரசாமி கூறும்போது, “மரப்பேட்டையில் இருந்து தொழிற்பேட்டை வரை இருபுறமும் சர்வீஸ் ரோடு இருப்பதால் நான்கு வழி சாலையின் அகலம் குறைந்து வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. எனவே, விபத்துகளை தடுக்க சர்வீஸ் சாலையில் உள்ள இரும்பு தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டு, ஆறு வழிச் சாலையாக விரைவில் தரம் உயர்த்தப்படும்” என்றார்.