தொட்டபெட்டா சாலையில் காட்டு யானை: காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை


நீலகிரி: ஊட்டியில் முதல்முறையாக யானை நடமாட்டம் தென்பட்ட நிலையில், காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்து வனத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

வனப்பகுதியில் இருந்து கடந்த 5ம் தேதி வெளியேறிய காட்டு யானை, தொட்டபெட்டா செல்லும் சாலையில் உலா வந்தது. இதைக் கண்ட சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வனத் துறையினர் வந்து, யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு யானையை வனத்துக்குள் விரட்டினர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு ஊட்டி - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சவுத்விக் பகுதியில் நள்ளிரவு வலம் வந்த யானை, மீண்டும் தொட்ட பெட்டா சாலையில் முகாமிட்டது. தொட்டபெட்டா காட்சிமுனையில் யானை நடமாட்டம் உள்ளதால், நேற்று ஒருநாள் தொட்டாபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் கௌதம் கூறும்போது, ”முதுமலையில் இருந்து பாகன்கள் மற்றும் கூடலூரை சேர்ந்த யானைகள் விரட்டுவோர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தியும் யானையை பிடிக்க தயாராக உள்ளோம்” என்றார்.

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த 200 ஆண்டுகால ஊட்டி வரலாற்றில் முதல் முறையாக யானை நடமாட்டத்தைக் கண்ட மக்கள் மட்டுமின்றி, வனத்துறையினரும் குழப்பத்தில் உள்ளனர். பர்லியாறு பகுதியில் மரங்களை வெட்டுவதற்கும், பொக்லைன் ரக இயந்திரங்க ளை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால் தான், ஊட்டிக்குள் யானை புகுந்துள்ளது, என்றனர்.

x