சென்னை: ஊழல் புகார்கள், முறைகேடுகளில் சாதனை படைத்த திமுக அரசுக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து, சாதனையை படைப்பார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்ணாத்துரையின் உயிர் மூச்சாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இருந்தது. ஆனால், அதற்கு நேர் எதிராக செயல்பட்டு தமிழக அரசு நிர்வாகத்தின் அடிப்படையில் தொடங்கி அமைச்சர்கள் வரை ஊழல் மற்றும் முறைகேடு புகார்களில் சிக்கி நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி தங்களின் பதவி இழந்ததே திமுக அரசின் முதல் சாதனை. தாலிக்குத் தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம், அம்மா மருந்தகம் என மக்கள் நலனுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திட்டங்கள் அனைத்தையும் திட்டமிட்டு முடக்கியது தான் திமுக அரசின் 2-வது சாதனை.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், சட்டவிரோத மது விற்பனை என குற்றச்சம்பவங்கள் நிறைந்து தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா ? சமூக விரோத ஆட்சியா ? என கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருப்பது திமுக ஆட்சியின் 3-வது சாதனை.
பால்விலை உயர்வில் தொடங்கி தொழில் வரி, சொத்து வரி, மின் கட்டணம் என வரிகளையும், கட்டணங் களையும் பன் மடங்கு உயர்த்தி ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பை சந்தித்து வரும் ஏழை, எளிய, சாமானிய மக்களின் மீது தாங்க முடியாத அளவுக்கு பொருளாதார சுமையை ஏற்றிய நிர்வாகத் திறமையின்மை,
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசையும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கேரள அரசையும் கண்டிக்கத் தவறியது இப்படி பல சாதனைகளை திமுக அரசு படைத்துள்ளது. ஊழல் புகார்களிலும், முறைகேடுகளிலும் சாதனை படைத்த திமுக அரசுக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து தமிழக மக்கள் சரித்திர மிக்க சாதனையை படைப்பார்கள் என்பது உறுதி. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.