மீண்டும் மின்கட்டணம் உயர்வா? - யூனிட்டுக்கு 10 காசு கூடுதலாக செலுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு


சென்னை: ‘தமிழகத்தில் உள்ள உயரழுத்த மின்பிரிவு நுகர்வோர் வெளிச் சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 10 காசு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்’ என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் போன்ற அதிக மின்சாரம் பயன்படுத்தும் உயரழுத்தப் பிரிவு நுகர்வோர் வெளிச் சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்தை எடுத்துச் செல்ல மின்வாரியத்தின் மின்வழித் தடங்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக, மின்வாரியம் ஏற்கெனவே வீலிங் கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணம் (சர்சார்ஜ்) வசூலிக்கிறது. தற்போது மின்வாரியம் வசூலிக்கும் சர்சார்ஜ் யூனிட்டுக்கு ரூ.1.96 ஆக உள்ளது.

இந்நிலையில், உயரழுத்த மின்பிரிவு நுகர்வோர் வெளிச் சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 10 காசு கூடுதல் கட்டணம் (சர்சார்ஜ்) செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மே 1ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை வெளிச் சந்தையில் வாங்கும் மின்சாரத்துக்கு இந்தக் கட்டண விகிதம் பொருந்தும்.

ஏற்கெனவே மின்கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்கள் இந்தக் கூடுதல் சர்சார்ஜ் விதிப்பை கைவிடுமாறு மின்வாரியத்துக்கும், ஒழுங்கு முறை ஆணையத்துக்கும் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும், ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x