சென்னை: அரசின் திட்டங்களை செழுமைபடுத்த ஆலோசனை தாருங்கள். தமிழகத்தின் வளர்ச்சி, தனித்துவத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று பத்திரிகை, ஊடகத் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பத்திரிகையாளர், ஊடகத் துறையினர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெ ற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2021-ல், தமிழகத்தில் மக்கள் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்று, 6-வது முறையாக திமுக ஆட்சி அமைந்தது. மே 7-ம் தேதி நான் முதல்வராக பொறுப்பேற்றேன். இந்த மே.7ல் திமுக அரசு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். சொல்லாத பல திட்டங்களையும் தொலை நோக்குப் பார்வையோடு நிறைவேற்றி வருகிறோம். நாள்தோறும், புதிய புதிய திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுகிறோம். அதேபோல், சாதனைக்கு மேல் சாதனையை திமுக அரசு நிகழ்த்தி வருகிறது.
முந்தைய ஆட்சியாளர்களால் சீரழிந்த பத்தாண்டு கால நிர்வாகம் ஒருபக்கம். மதவாதம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களுக்கு இடமளித்து, இந்திய நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த நிலை ஒரு பக்கம். தமிழ்நாட்டுக்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுக்கும் மத்திய அரசு இன்னொரு பக்கம். இதையெல்லாம் சமாளித்து ஆட்சி நடத்துகிறோம். தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்குள் இருந்தது.
சரியான இலக்கை நிர்ணயித்து, அதனை நோக்கி உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு 4 ஆண்டு திமுக அரசே சாட்சி. திமுக அரசு, கொள்கை, சேவை இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. நான்காண்டுகளில் நெருக்கடி வந்தாலும், அவதூறுகள் பரப்பப்பட்டாலும், எந்த இடத்திலும், நாங்கள் கொள்கையில் தடம் மாறவில்லை. மக்களுக்கான சேவையிலும் சோர்ந்து போகவில்லை. அதன் வெளிப்பாடுதான் அரசின் முத்திரை திட்டங்கள்.
மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், காலை உணவு, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் என்ற இந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் உங்கள் பங்கு மிக அதிகம். அதற்கு எனது நன்றி. என்னைப் பொறுத்தவரை, விமர்சனங்களை முன்வைத்தால், அதனை ஆக்கப்பூர்வமாக நான் ஏற்றுக்கொள்கிறவன். ஆலோசனைகள் இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறேன்.
இந்தியாவுக்கே முன்மாதிரியாக பல திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நமது திட்டங்களைப் பார்த்து, பல்வேறு மாநில அரசுகள் அந்த திட்டங்களை அவர்கள் மாநிலங்களிலும் செயல்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட திட்டங்களை, மனப்பூர்வமாக பாராட்ட வேண்டும். விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையே விமர்சனங்களால் செதுக்கப்பட்டது தான். அரசின் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை கூறுங்கள்.
இன்னும் சிறப்பாக செயல்படுத்துவோம். பாராட்ட வேண்டியதை பாராட்டினால்தான் விமர்சனத்துக்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். எனவே, தயங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள். சமத்துவம், சமூகநீதி, சமதர்மம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஆகிய அரசியல் பண்பாடுகளைக் கொண்ட மண், நமது தமிழகம்.
இந்த லட்சியங்களை அடையும் பயணத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்தப் பயணத்தில், ஊடகங்கள் பங்கு முக்கியமானது. எனவே, தனிப்பட்ட ஸ்டாலினையோ, திமுகவையோ பாராட்ட வேண்டாம். தமிழகத்தை பாராட்டுங்கள். தமிழகத்தின் வளர்ச்சி, தனித்துவத்தை மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.