கோவை: தொடர் கொலை சம்பவங்களால் கொங்கு பகுதியில் தோட்டத்து வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் பெண் நிர்வாகியை கொடூரமாக கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தோட்ட வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தோட்டத்தை காலி செய்துவிட்டு, வெளியூர் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல்லடம், சிவகிரி சம்பவங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் உள்ளது உறுதியாகியுள்ளது. கொங்கு பகுதியில் இனி தோட்டத்து வீட்டில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விடுமுறைக்கு வந்தவர்களைக்கூட திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
யார் வழக்கு தொடுக்கிறார்களோ, அவர்களை கைது செய்வதை திமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது. மதுரை ஆதீனம் விவகாரத்திலும் அதுவே நடந்துள்ளது. அதிமுக, பாஜக கூட்டணியால் சிறுபான்மை வாக்கு வங்கி பாதிக்கப்படாது. கூட்டணி குறித்து வரவேற்றுப் பேசியதற்காக ஐக்கிய ஜமாத் அமைப்பு நிர்வாகியான அதிமுகவை சேர்ந்த அப்துல் ஜப்பார் ஜமாத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரைப்போல சிறுபான்மையினர் பலர் எங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.